Published : 18 Apr 2019 04:24 PM
Last Updated : 18 Apr 2019 04:24 PM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா நீதிமன்றத்தில் பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருடர்கள் அனைவரின் பெயரிலும் மோடி என்ற பெயர் இருக்கிறது என்று ராகுல் காந்தி சமீபத்தில் பேசிய கருத்துக்கு எதிராக இந்த வழக்கை சுஷில் குமார் மோடி தொடர்ந்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கள்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பேசுகையில், " எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்குபின்னால் மோடி என்று இருக்கிறது. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி. இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் " என்று பேசினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு அப்போது, பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கண்டனம் தெரிவித்தார். பிஹாரில் மோடி என்ற சமூகத்தனர் ஏராளமாக இருக்கிறார்கள், அவர்களை புண்படுத்தும் வகையில் பேசாதீர்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடியும், என்னை அவமானப்படுத்தும் நோக்கில், திருடன் என்று கூறும் வகையில் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையே ராகுல் காந்தி அவமானப்படுத்துகிறார் " என்று பேசிஇருந்தார்.
இந்நிலையில், பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பாட்னா தலைமை மாஜிஸ்திரேட் குமார் குஞ்சன் முன்னிலையில், ராகுல் காந்தி மீது ஐபிசி 500 பிரிவின் னைக்குரிய அவதூறு) கீழ் மனு அளித்துள்ளார். இந்த மனு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வருகிறது
இதுகுறித்து துணை முதல்வர் சுஷில் குமார் மோடி நிருபர்களிடம் கூறுகையில், " ராகுல் காந்தியின் மோடி குறித்து கடந்த 13-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகியது. இது மோடி சமூகத்தின் மீதான ஒட்டுமொத்த மதிப்பையும் குலைத்துள்ளது. இது வேதனை அளிக்கிறது " எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT