Published : 04 Apr 2019 09:17 AM
Last Updated : 04 Apr 2019 09:17 AM

முலாயமும் அகிலேஷும் பாஜக முகவர்கள்: சந்திரசேகர் ஆசாத் குற்றச்சாட்டு

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் பாஜக முகவர்கள் என்று 'பீம் ஆர்மி' நிறுவனர் சந்திரசேகர் ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

உ.பி.யில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறும்போது, “வாரணாசியில் பாஜகவுக்கு எதிரான தலித் வாக்குகளை பிரிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த சதியின் ஒரு பகுதியாகவே அங்கு சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுகிறார். அவர் பாஜகவின் முகவராக செயல்படுகிறார்” என்றார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சந்திரசேகர் ஆசாத் பேசும்போது, “உ.பி.யில் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது, தலித் மக்களுக்கு எதிராக அட்டூழியம் செய்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்தார். அவரது தந்தை முலாயம் நாடாளுமன்றத்தில் பேசும்போது, மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றார். அவர்கள் இருவரும் பாஜகவின் முகவர்கள். நான் அல்ல. முலாயம், அகிலேஷுடன் மாயாவதி கூட்டணி வைத்துள்ளார். இவர்களைப் பற்றி நான் கேள்வி எழுப்பினால் என்னை பாஜகவின் முகவர் என்கின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியில் பிராமணர் முகமாக விளங்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ராவால் மாயாவதி தவறாக வழிநடத்தப்படுகிறார். வாரணாசியில் நான் போட்டியிடுவதால் பிரதமர் மோடியின் கரம் வலுவடையும் என்றால் நான் அங்கு போட்டியிட மாட்டேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x