Published : 20 Mar 2019 01:30 PM
Last Updated : 20 Mar 2019 01:30 PM
பிரதமர் மோடியின் நானும்கூட காவல்காரர் என்ற வாசகத்தை கிண்டல் செய்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மக்கள் தங்கள் பிள்ளைகள் காவல்காரராக வரவேண்டும் என்று விரும்பினால், மோடிக்கு வாக்களிக்கலாம் என்று கிண்டல் செய்துள்ளார்
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, நாட்டில் யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன், நானும் ஊழல் செய்யமாட்டேன். தேசத்தின் காவலாளியாக இருப்பேன் என்று பேசியிருந்தார். ஆனால், ரஃபேல் போர் ஒப்பந்த ஊழல் குறித்த பேச்சின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவலாளி ஒரு திருடன் என்று மோடியை மறைமுகமாகக் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது
பிரதமர் மோடியின் நானும்கூட காவலாளிதான் என்கிற வார்த்தையை பாஜகவின் பல்வேறு தலைவர்களும் தங்கள் பெயர்களுக்கு முன் சேர்க்கத் தொடங்கினார்கள். இந்தியில் சவுகிதார் எனும் வார்த்தையை ஏராளமான பாஜக தலைவர்கள் தங்கள் பெயருக்கு முன் சேர்த்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள்.
இந்நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பிரதமர் மோடியின் சவுகிதார் வார்த்தையைக் கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், " ஓட்டுமொத்த தேசத்தைக் காவல்காரராக மாற்ற பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். மக்கள் தங்கள் குழந்தைகளைக் காவல்காரராக ஆளாக்கிப் பார்க்க விரும்பினால், அவர்கள் தாராளமாக மோடிக்கு வாக்களிக்கலாம். ஆனால், தங்கள் குழந்தைக்கு நல்ல கல்வி தேவை, எதிர்காலத்தில் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்கறிஞராகவோ மாற வேண்டும் என்று மக்கள் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT