Published : 06 Sep 2014 06:49 PM
Last Updated : 06 Sep 2014 06:49 PM

ஏமாற்றிய காதலனை சிறையில் இருந்து ஜாமீனில் எடுக்க காதலி முயற்சி

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய காதலனை சிறையில் அடைத்த காதலி, தான் வேலைக்குச் சென்று சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு ஜாமீனில் எடுக்க முயற்சி செய்து வருகிறார்.

'சிறையில் இருந்து காதலன் வெளியே வந்தால் தன்னை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கையில் ஜாமீனில் எடுப்பதாகவும், அவ்வாறு நடக்காமல் போனால் காதலனை தீ வைத்து கொளுத்திவிட்டு, தானும் தீ வைத்துக் கொள்வேன்' எனக் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண். பெற்றோர் இல்லை. 10-ம் வகுப்பு முடித்துவிட்டு சென்னை அருகே உள்ள செல்போன் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு ரயிலில் செல்லும்போது தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டு களாகக் காதலித்து வந்தனர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கோவைக்கு அழைத்து வந்த செந்தில்குமார், சிறிது நாள்கள் கழித்து அப்பெண்ணை கைவிட்டுவிட்டு தலைமறைவானாராம்.

இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை ஜுன் 17-ம் தேதி கைது செய்தனர். தற்போது, கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, தன்னை ஏமாற்றிய காதலனை ஜாமீனில் எடுக்க அப்பெண் முயற்சி செய்து வருகிறார். இதற்காக, இதுவரை தான் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த ரூ.1.5 லட்சத்தைக் கொண்டு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீனுக்காக செலவு செய்துள்ளார். தற்போது, நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கான உத்தரவு நகல் வெள்ளிக்கிழமை வரும் என நினைத்து கோவை மத்திய சிறை முன்பு அப்பெண் காத்திருந்தார். ஆனால், செவ்வாய்க்கிழமை வரும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, அப்பெண் கூறியதாவது:

ஜாமீனில் வர உள்ள அந்த இளைஞரை, அவரது உறவினர்கள் சந்தித் தனர். வெளியே வந்த பிறகும் தன்னை திருமணம் செய்து கொள்ள அவர் விருப்பம் இல்லாது உள்ளார். எனக்கு என்று யாரும் கிடையாது. அவரை நம்பித்தான் இருக்கிறேன். நான் சேர்த்து வைத்த பணம் அனைத்தையும் ஜாமீனுக்காக செலவு செய்து விட்டேன்.

உறவினர்களின் பேச்சைக் கேட்டு வெளியே வந்த பின் என்னை மீண்டும் கைவிட்டுச் சென்றால் அவரை எரித்துவிட்டு நானும் தீ வைத்துக் கொள்வேன் என்றார் கலங்கிய கண்களைத் துடைத்தபடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x