Last Updated : 06 Mar, 2019 01:26 PM

 

Published : 06 Mar 2019 01:26 PM
Last Updated : 06 Mar 2019 01:26 PM

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு  நன்கொடை: சொந்தப் பணத்தில் இருந்து ரூ.21 லட்சம் வழங்கிய மோடி

கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குக்கு  ரூ.21 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. தன்னுடைய சொந்த சேவிங்ஸ் கணக்கில் இருந்து அவர் பணத்தை வழங்கியுள்ளார்.

 

முன்னதாக, கடந்த பிப். 25-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. அங்கிருந்த ஏராளமான துப்புரவுத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து துப்புரவுத் தொழிலாளர்கள் 5 பேரின் பாதங்களை பிரதமர் மோடி கழுவி அவர்களை கவுரவப்படுத்தினார்.

 

துப்புரவுத் தொழிலாளர்களின் சீரிய பணியால், பிரயாக்ராஜ் நகரம் தூய்மையாக விளங்குவதாகவும், அவர்களின் செயல் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகவும் மோடி புகழாரம் சூட்டினார்.இதைத் தொடர்ந்து சிறந்த சேவையாற்றிய துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விருதுகளை வழங்கினார்.

 

துப்புரவுத் தொழிலாளர்கள் பாதங்களை சுத்தம் செய்து மோடி பூஜை செய்தது பரவலாக பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்குள்ளாக வாரணாசியில் துப்புரவுப்பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பணியாளர்கள் பலியாகினர். பகுதி நேர ஊழியர்களான அவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படாதது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது.

 

பிரதமர் நரேந்திர மோடி, துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களைக் கழுவிய நிலையில், அவரின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்தது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

 

இதனிடையே  மோடி, கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களுக்கான கணக்குக்கு, தன்னுடைய சொந்தப் பணமான ரூ.21 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x