Published : 11 Mar 2019 09:30 PM
Last Updated : 11 Mar 2019 09:30 PM
டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பாஜகவையும் மோடியையும் எதிர்கொள்ள வலுவான கூட்டணி என்பதால் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்த பரபரப்பான சூழலில் டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்டபாளர்களை ஆம் ஆத்மி அதிரடியாக அறிவித்தது. மேற்கு டெல்லி தொகுதிக்கு மட்டுமே ஆம் ஆத்மி கட்சி வேடபாளரை அறிவிக்கவில்லை. வேட்பாளர்களை அறிவித்து விட்டபோதிலும் கூட்டணி கதவை ஆம் ஆத்மி மூடவில்லை.
காங்கிரஸூடன் ஆம் ஆத்மி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எனினும் தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை என காங்கிரஸ் சில தினங்களுக்கு முன்பு திட்டவட்டமாக அறிவித்தது. இதனை ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்தது. பாஜகவுக்கு எதிரான வாக்கை பிரிக்க காங்கிரஸ் உதவி செய்கிறது, பாஜக - காங்கிரஸ் இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என கேஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார்.
எனினும் ஷீலா தீட்சித் நேற்று சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இதனால் ஆம் ஆத்மியுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டெல்லியில் இன்று காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெறப்போவது உறுதி. இதற்காக கட்சி தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். இதற்கு ஏற்ப காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT