Published : 22 Sep 2014 03:36 PM
Last Updated : 22 Sep 2014 03:36 PM
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா தொடர்பான புகாரை முடித்து வைக்க அவசரம் காட்டுவது ஏன்? என்ற கேள்விக்கு சிபிஐ பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.
நிலக்கரி சுரங்க உரிமம் ஒதுக்கீடு தொடர்பாக, பிரபல தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, அப்போதைய நிலக்கரித் துறை செயலர் பி.சி.பாரக் உள்ளிட் டோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் முன்பு விசாரணையில் உள்ளது. சிபிஐ தரப்பில், குமாரமங்கலம் பிர்லா மீதான வழக்கை முடித்து வைக்க அனுமதி கோரி, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
“பிர்லா தொடர்புடைய ஹிண்டால்கோ நிறுவனம் நிலக்கரி சுரங்க உரிமம் கோரி அளித்த விண்ணப்பத்தை நிலக்கரி சுரங்க உரிம ஒதுக்கீட்டுக் குழு பரிசீலித்த தற்கான பதிவேடு காணவில்லை. எனவே இந்த வழக்கை முடிக்க அனுமதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை முடிக்க சிபிஐ இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா ஆஜரானார்.
“இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்களைப் பெற, டிஐஜி, எஸ்பி ஆகிய அதிகாரிகள் பணியில் இல்லை. எனவே, நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை” என்று வழக்கறிஞர் சீமா வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அக்டோபர் 13-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சிபிஐ-க்கு உத்தரவு பிறப்பித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT