Last Updated : 26 Sep, 2014 10:04 AM

 

Published : 26 Sep 2014 10:04 AM
Last Updated : 26 Sep 2014 10:04 AM

மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸார் போராட்டம்: வன்முறை மூண்டதால் போலீஸார் தடியடி

பாஜக தலைமையிலான மத்திய அரசு கருப்புப் பண மீட்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி, டெல்லியில் இளைஞர் காங்கிரஸார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை மூண்டதால் போலீஸார் தடியடி நடத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இளைஞர் காங்கிரஸார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதில் டெல்லி, ஹரியாணா மற்றும் உபி மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் கலந்து கொண்டனர்.

‘பொதுமக்கள் கோபக் கூட்டம்’ என்ற பெயரில் நடந்த இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி யின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. எனவே அவருக்கு நெருக்கமானவரும் கட்சியின் பொதுச் செயலாளருமான திக்விஜய் சிங் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அப்போது திக்விஜய் பேசும்போது, “ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும். அவருக்கு ஆதரவாக நாம் அனைவரும் இருப்போம். இங்குள்ள பெரும்பாலான இளைஞர்கள் ‘வாட்ஸ்அப்’-ல் இருக்கின்றனர். இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மோடி தலைமையிலான ஆட்சியின் தவறுகளை உடனுக்குடன் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என இங்குள்ள இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன்” என ஆவேசமாக தெரிவித்தார்.

இவர் பேசி முடித்த பிறகு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களில் பலர் போலீஸாரின் தடுப்புகளை மீறி நாடாளுமன்ற சாலைக்குள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். மேலும் பலர் அந்தப் பகுதியை சுற்றியுள்ள அரசு அலுவலக கட்டிடங்களின் மீது ஏற முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இவர்களைத் தடுக்க முயன்றதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் போலீஸாரின் தடுப்பை மீறி வன்முறையில் ஈடுபட முயன்ற னர். இதனால் கூட்டத்தைக் கட்டுப் படுத்துவதற்காக அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சத்தவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலின்போது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்பன போன்ற வாக்குறுதிகளை பாஜக அளித்திருந்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்க ளைக் கடந்த பிறகும் இந்த வாக்குறுதிகள் எதையும் நிறை வேற்றவில்லை.

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகள் பற்றியும், மோடி தலைமையிலான அரசின் செயலற்ற தன்மையையும் மக்களிடம் அமைதியாக எடுத்துக் கூறுவதற்காகதான் நாங்கள் இங்கு கூடியுள்ளோம் . ஆனால் இந்தப் போராட்டத்தில் கலவரம் ஏற்படுத்தி எங்களது பெயரை டெல்லி போலீஸார் கெடுக்க முயல்கின்றனர்” என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x