Published : 05 Mar 2019 06:10 PM
Last Updated : 05 Mar 2019 06:10 PM
பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எத்தனைபேர் என்று ஆதாரத்துடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய தகவலை அளித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
பாலகோட் தாக்குதலில் 350 தீவிரவாதிகள் பலியானதாக செய்திகள் வெளியாகின. இந்த தாக்குதல் நடந்த அன்று அறிக்கை வெளியிட்ட மத்திய வெளியுறவுத்துறையும், பாலகோட் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தது. ஆனால், எண்ணிக்கையைத் தெரிவிக்கவில்லை. அதேபோல விமானப்படை தளபதியும் இப்போதுள்ள நிலையில் எண்ணிக்கையை உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, "பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் " என்று தெரிவித்தார்.
இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதாரம் கோரின. இந்நிலையில் அசாமில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று சிலர் கேள்வி கேட்கின்றனர். இந்தியாவின் மரியாதைக்குரிய மற்றும் நம்பகமான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை அளிக்கும் உளவுப்பிரிவு) பாலகோட் தீவிரவாத முகாமில், 300 மொபைல் போன்கள் உபயோகத்தில் உள்ளதாகச் சொன்னது. இந்திய விமானப் படை, குண்டுகளை வீசும் முன்பு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கொண்டுதான், பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினோம்'' என்றார் ராஜ்நாத் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT