Published : 21 Mar 2019 02:13 PM
Last Updated : 21 Mar 2019 02:13 PM

44% விவசாயிகளுக்கு மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் திட்டத்தில் நிதியுதவி சேரவில்லை

பிரதமரின் விவசாயி (பிஎம்கிசான்) நிதியுதவித் திட்டத்தின் விவசாய குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவதில் இதுவரை 56 சதவீதம் அதாவது, 2.74 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே முதல் கட்ட நிதி ரூ.2 ஆயிரம்  சென்று சேர்ந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.

இன்னும், 2.18 கோடி குடும்பங்களுக்கு முதல்கட்ட நிதியான ரூ.2 ஆயிரம் சென்று சேரவில்லை. போலிகளைத் தடுப்பதற்காக 4 கட்ட சரிபார்த்தல் பணிகள் நடப்பதால், தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மத்திய அரசு தாக்கல் செய்த  இடைக்கால பட்ஜெட்டில் 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.20 ஆயிரம்  கோடியும், அடுத்த நிதியாண்டில் ரூ.75 ஆயிரம் கோடியையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தை மக்களவைத் தேர்தல் அறிவிக்கும் முன், கடந்த மாதம் 24-ம் தேதி பிரதமர மோடி தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்குள் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் நிதி விவசாயிகள் குடும்பங்களுக்குச் சென்று சேரும் வகையில் மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்தது. மார்ச் 31-ம் தேதிக்குள் முதல்கட்டத் தவணையை பயனாளிகள் கணக்கில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டது.

ஆனால், இதுவரை 56 சதவீதம் பயனாளிகளுக்கு மட்டும்தான் இந்த முதல்கட்ட தவணை சென்று சேர்ந்துள்ளது. இன்னும் 44 சதவீதம் பேர் 2.18 கோடி குடும்பங்களுக்கு முதல்கட்ட நிதியான ரூ.2 ஆயிரம் இன்னும் சென்று சேரவில்லை என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண்அமைச்சகத்தின் அதிகாரிஒருவர் கூறியதாவது:

"இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு சரியாகச் சேரும் வகையில் உறுதிப்படுத்தி வருகிறோம். இதற்காக 4 கட்டங்களாக சரிபார்த்தல் பணி நடந்து வருகிறது. முதல் கட்டப் பயனாளிகள் அடையாளம் காண்பதிலேயே ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.

தெலங்கானா மாநிலத்திலும் இதேபோன்று, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நிதியுதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்துக்காக தெலங்கானாவில் உள்ள அரசு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் உழைத்தது.

அனைத்து விவசாயிகளின் நில ஆதாரங்கள், ஆவணங்கள், நிலப் பத்திரங்கள், வங்கிக்கணக்குகள் ஆகியவற்றைப் பரிசோதித்து ஆய்வு செய்து பயனாளிகள் அடையாளம் காணப்பட்டது.

ஆனால், பிஎம்-கிசான் திட்டத்தில் பயனாளிகளை அடையாளம் காணும் பணியை மாநில அரசுகளிடம் மத்திய அரசு அளித்துவிட்டது. அதாவது மாநில அரசு ஏற்கெனவே வைத்திருக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பயனாளிகளை அடையாளம் காணக்கூறியது. இந்தப் பரிசோதனையில் 3 கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலில் மாநில அரசுகள் அளித்த பயனாளிகள் விவரங்களில், கட்டாயம் தேவைப்படும் அனைத்து புள்ளிவிவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்யப்படுகிறது.

இரண்டாவதாக, விவசாயிகளின் வங்கிக்கணக்கு எண், ஐஎப்எஸ்சி எண் சரியாக இருக்கிறதா என்றும், 3-வது கட்டமாக, வங்கிக்கணக்கில் உள்ள பெயரும், பயனாளிகள் பெயரும் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. இதில் ஏதாவது சிக்கல் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் விவரங்கள் மீண்டும் அனுப்பப்பட்டு களஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சரிபார்க்கப்படுகிறது.

ஆனால், மக்களவைத் தேர்தல் பணிகளில் பல்வேறு மாநில அரசுகளும் இருப்பதால், இந்த சரிபார்த்தல் பணி மிகவும் தாமதமாக நடந்து வருகிறது.

இந்த 3 கட்ட சரிபார்த்தல் பணிகளும் முடிந்துவிட்டால், மாநில அரசுகளுக்கு பணப் பரிமாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு,  நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும். இதுவரை நடந்த 56 சதவீதப் பரிமாற்றத்தில் ஒருசதவீதப் பரிமாற்றம் தோல்வி அடைந்துள்ளது. அதாவது 4.10 லட்சம் விவசாயிகள் குடும்பங்களுக்கு பணம் பரிமாற்றம் செய்தும் சென்று சேரவில்லை".

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

பாஜக ஆளாத பல மாநிலங்கள் வரும் 31-ம்தேதிக்குள் விவசாயிகள் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் தொகையை முழுமையாக சேர்க்க முடியாத நிலையில் இருக்கின்றன. குறிப்பாக டெல்லி, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகியவை விவசாய பயனாளிகளின் பெயரை இதுவரை மத்திய அரசிடம் அளிக்கவில்லை.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயனாளிகள் பெயரைத் தாக்கல் செய்தாலும், பணத்தை  பரிமாற்றம் செய்ய முடியவில்லை. கர்நாடக அரசுக்கு இதுவரை 17 பேருக்கு மட்டுமே பணம்பரிமாற்ற ஒப்புதல் கிடைத்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x