

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரியும், தொழிலதிபருமான நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் நேற்று வாரண்ட் பிறப்பித்தது.
மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை எப்போது லண்டன் போலீஸார் செயல்படுத்தப் போகிறார்கள் என்கிற விவரம் இதுவரை தெரியவில்லை. ஆனால், விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீரவ் மோடி போலீஸாரால் கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் முன் தனக்குரிய பிணையை பெற்றுவிடுவார். அதன்பின்புதான் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த வழக்கிலும் வைர வியாபாரி நீரவ் மோடி சிக்கியுள்ளார். தற்போது லண்டனில் வாழும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித்திடம் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதற்கிடையே லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில நாளேடு வெளிட்ட செய்தியில், லண்டனில் வெஸ்ட் என்ட் பகுதியில் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் நீரவ் மோடி வசிப்பதாக செய்தி வெளியானது. மேலும், அந்த நாளேட்டின் நிருபர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல் நீரவ் மோடி சென்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.