

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஆதில் அகமது நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு காஷ்மீரின் டிரால் பகுதியைச் சேர்ந்த அகமது கான் (23) மூளையாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எலெக்ட்ரீசனான இவர் கடந்த 2017-ம் ஆண்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார்.
தற்கொலைப்படை தீவிரவாதி ஆதில் அகமதுவும் எலெக்ட்ரீசன் அகமது கானும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அகமது கான் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவாக உள்ள அவரை என்.ஐ.ஏ. தீவிரமாக தேடி வருகிறது. அவர் பிடிபட்டால் புல்வாமா தாக்குதல் பின்னணி குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.