Last Updated : 27 Mar, 2019 07:51 AM

 

Published : 27 Mar 2019 07:51 AM
Last Updated : 27 Mar 2019 07:51 AM

சமரச குழு பேச்சுவார்த்தையின்போது அயோத்தி விவகாரத்தில் முந்தைய நிலைப்பாடு தொடரும்: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு

அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூன்று பேர் கொண்ட குழு சமரசப் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. இதில், தங்களுடைய முந்தைய நிலைப்பாட்டையே தொடர அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுமாறு இந்துக்கள் தரப்பும், இடிக்கப்பட்ட மசூதியை மீண்டும் கட்டுமாறு முஸ்லிம்கள் தரப்பும் வலியுறுத்தி வருகின்றன. இதனால், இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்த மூன்று பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராம் பஞ்சு ஆகிய மூன்று தமிழர்கள் சமரசக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நிர்வாகக் குழு ஆலோசனைஇந்நிலையில் இக்குழுவினர் முன்பு ஆஜராகும்போது முறையிட வேண்டிய விஷயங்கள் குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இதற்காக உ.பி.யின் லக்னோவில் அதன் நிர்வாகக்குழு நேற்று முன்தினம் மாலை கூடி விவாதித்தது. இதில் வேறு சில விஷயங்கள் பற்றி பேசப் போவதாகத் தெரிவித்த அவர்கள், அயோத்தி விஷயத்தில் ரகசியம் காத்தனர். எனினும், இந்த விவகாரத்தில் முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் தனது பழைய நிலைப்பாட்டையே சமரசக் குழுவின் முன்பு எடுத்துரைக்க இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து முஸ்லிம் தனிச் சட்ட வாரிய நிர்வாக வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “வாரியத்தின் தலைவர் மவுலானா ரப்பே ஹஸ்னி நத்வீ தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் மசூதி கட்டப்பட வேண்டும் என்ற பழைய நிலைப்பாட்டை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது” என்றனர்.

அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்ட சமரசக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடக் கூடாது என ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், இதற்கு முன்பு கடைசியாக அயோத்தி விவகாரத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நடத்திய சமரச பேச்சுவார்த்தை போல எந்த செய்தியும் வெளியாகாமல் உள்ளது. வரும் மார்ச் 27-ல் சமரசக் குழு மீண்டும் அயோத்திக்கு பயணம் செய்ய உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x