Published : 05 Mar 2019 11:33 AM
Last Updated : 05 Mar 2019 11:33 AM

தாமதமாகும் தேர்தல் தேதி; மோடி அரசு திட்டங்களை அறிவிக்கும் வரை காத்திருக்கும் தேர்தல் ஆணையம்: காங்கிரஸ் கடும் சாடல்

பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை அறிவித்து முடிக்கும் வரை மக்களவைத் தேர்தல் தேதிகளை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருவதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. ஏப்ரல் மே மாதம் 2ம் வாரம் வரை மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தன.

இந்தநிலையில் தேர்தல் தேதி அறிவிப்பு காலதாமதம் ஆகி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கான நேரம் கடந்து விட்ட போதிலும், தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடாமல் கால தாமதம் செய்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் என அனைத்திலும் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது அறிவிப்பு முழுவதையும் வெளியிட்டு முடியும் வரை காத்திருக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது கேலிக்குரியது. மக்கள் ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

இவ்வாறு அகமது படேல் தெரிவித்துள்ளார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x