Published : 10 Mar 2019 01:12 PM
Last Updated : 10 Mar 2019 01:12 PM
தீவிரவாதத்தால் நாங்கள் அனுபவித்தது போதும், இனியும் இந்த தேசம் பாதிக்கப்படும்வகையில் வைத்திருக்க முடியாது, இனி பொறுத்துக் கொள்ளவும்மாட்டோம் என்று பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்.
மத்திய தொழில்பிரிவு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 50-வது ஆண்டு விழா இன்று உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்புப் படை கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஏறக்குறைய 61 விமானநிலையங்கள், அணுமின்நிலையம், டெல்லி மெட்ரோ, விண்வெளி மையம், துறைமுகம், நிலக்கரி சுரங்கம், உருக்கு மற்றும் மின்உற்பத்தி மையங்கள் உள்பட 345 முக்கிய இடங்களில் சிஎஸ்ஐஎப் பிரிவினர் பாதுகாப்புப் பணியை மேற்கொள்கின்றனர். இதில் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது, மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்புப் படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்), இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை, ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த தேசம் புல்வாமா, உரி போன்ற தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டதெல்லாம் போதும்,போதும். தீவிரவாதிகள் நமது தொல்லை கொடுத்தாலும் இனியும் பாதிக்கப்படும் வகையில் நாம் இருக்க முடியாது.
நமது அண்டை நாடு விரோதத்துடன் நம்மை நோக்கும் போது, உள்நாட்டில் சில சக்திகள் அண்டை நாட்டுக்கு ஆதரவளித்து, சதித்திட்டம் தீட்டும் நிலையில், மத்திய தொழிற்பிரிவு படையினர் போன்ற பாதுகாப்புப் படையினர் மிகவும் முக்கியமானவர்கள்.
நமது அண்டை நாடு(பாகிஸ்தான்) மிகவும் விரோதத்துடன் இருந்தாலும், அவர்கள் நம்முடன் போர் புரியும் அளவுக்குத் தகுதியில்லாதவர்கள். எல்லை கடந்து உள்நாட்டில் இருந்து அண்டை நாட்டுக்கு ஆதரவும் அளிக்கப்பட்டு, சதித்திட்டமும் வகுக்கப்படுகிறது. இதுபோன்ற கடினமான நேரங்களில் நாட்டின் பாதுகாப்பு என்பது சவாலான விஷயம். ஆனால், அதை சிஐஎஸ்எப் படையினர் சிறப்பாகச் செய்து வருகிறார்கள், உங்களின் சாதனை குறிப்பிடத்தகுந்தது. சுதந்திர இந்தியாவின் பல்வேறு கனவுகளை நிறைவேற்ற சிஎஸ்ஐஎப் முயற்சிகள் நடவடிக்கைகள் முக்கியமானது.
விஐபி கலாச்சாரம் சில நேரங்களில் தேசத்தின் பாதுகாப்பு முறைகளில் பல்வேறு தடைகளை ஏற்படுத்திவிடுகிறது. இதனால், சில நேரங்களில் அரசு குறிப்பிடத்தகுந்த முடிவுகள் டுத்து, கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT