Published : 09 Mar 2019 07:04 PM
Last Updated : 09 Mar 2019 07:04 PM

கணவர் இறந்த சில மாதங்களுக்குள் அரசியல் ஆசைப்படுவதா? - நடிகை சுமலதா பற்றி ரேவேண்ணா விமர்சனத்தால் அதிர்ச்சி

மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்பும் நடிகை சுமலதாவை தனிப்பட்ட முறையில் கணவர் இறந்த சில மாதங்களுக்குள் எம்.பி பதவிக்கு ஆசைப்படுவதாக முதல்வர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா விமர்சித்து பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் அண்மையில் காலமானார். அம்பரீஷின் சொந்த‌ தொகுதியான மண்டியாவில் அவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

ஆனால், இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்தத் தொகுதியில் தமது மகன் நிகில் கவுடாவை களமிறக்கவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். இதனால்,கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் அந்த தொகுதியை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

எனினும், மண்டியாவில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் தமக்குவாய்ப்பு வழங்கும் என்றும், இல்லையெனில், அங்கு சுயேச்சையாக போட்டியிடுவேன் எனவும் சுமலதா தெரிவித்திருக்கிறார். சுமலதா சுயேச்சையாக களமிறங்கினால் ஆதரவு அளிப்பதாக பாஜக தலைவர்கள் சிலர் அறிவித்தனர்.

இந்தநிலையில் குமாரசாமியின் சகோதரரும், மாநில அமைச்சருமான ரேவண்ணா, சுமலதாவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.  

சுமலதாவின் கணவர் அம்ப்ரீஷ்  இறந்து சில மாதங்களே ஆகிறது. அவருக்கு அதற்குள் அரசியல் ஆசையை பாருங்கள். எம்.பி.யாக வேண்டும் என விரும்புகிறார். சினிமாவில் நடிப்பது போலவே அரசியலிலும் நடிக்கிறார் ‘‘என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமலதா பற்றி ரேவண்ணா பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x