காஷ்மீர் எல்லையில் மேலும் 400 பதுங்குக் குழிகள்: எல்லை கிராம மக்களுக்கு பாதுகாப்பு என்ன? - குஜ்ஜார் இனத் தலைவர் அரசுக்கு கேள்வி

காஷ்மீர் எல்லையில் மேலும் 400 பதுங்குக் குழிகள்: எல்லை கிராம மக்களுக்கு பாதுகாப்பு என்ன? - குஜ்ஜார் இனத் தலைவர் அரசுக்கு கேள்வி
Updated on
1 min read

காஷ்மீரில் கடந்த ஐந்து நாட்களாக பாகிஸ்தானிய தீவிரவாதிகள் கடும் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டுவருவதை அடுத்து பூஞ்ச் மற்றும் ரஜவ்ரி ஆகிய இரட்டை மாவட்டங்களில் 400 பதுங்குக் குழிகள் கூடுதலாக அமைக்க காஷ்மீர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,

காஷ்மீர் எல்லையை மீறி ஷெல் தாக்குதல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக பூஞ்ச் மற்றும் ரஜவ்ரி மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் தனித்தனியே 200 தனிநபர் பதுங்குக் குழிகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை இன்று காஷ்மீர் அரசு வழங்கியது. இதற்கான நிதியை தொடர்புடைய ஊரக வளர்ச்சித் துறை மூலம துணை ஆணையர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இப் பதுங்குக் குழிகள் அனைத்தும் இன்னும் ஒரு மாதத்திற்குள் கட்டிமுடிக்கப்படும். இதற்கான உத்தரவை அரசு இன்று அதிகாரிகளுக்கு வழங்கியது''

இவ்வாறு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் வசிக்கும் ஒருவர் தெரிவிக்கையில், ''எல்லைத் தாண்டி வரும் ஷெல் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க ராணுவ வீரர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்கள் தஞ்சமடையவும் பதுங்குக் குழிகள் பாதுகாப்பான இடமாக இருக்கும்'' என்றார்.

துன்பதில் உழலும் எல்லைப்பகுதி மக்கள்

இதற்கிடையே, அப்பகுதியில் வசிக்கும் குஜ்ஜார் இனப் பிரிவு மக்களின் முக்கிய தலைவரான ஷாம்ஷெர் ஹக்லா பூச்சி எல்லைப் பகுதி மக்களின் பாதுகாப்பற்ற வளர்ச்சியற்ற வாழ்நிலை குறித்து தெரிவித்துள்ளதாவது:

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலில் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் இதுவரை பொதுமக்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது.

எல்லைப் பகுதியில் வசிப்பவர்களுக்கென்று பாதுகாப்பான குடியிருப்புப் பகுதிகளை அமைத்துத் தருமாறு அரசை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் எல்லையோரம் வசிக்கும் அப்பாவி மக்கள் தினம் தினம் எண்ணற்ற பிரச்சினைகளை சந்தித்து துன்பத்தில் உழன்று வருகின்றனர்.

அதிலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ஷெல் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானியர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

சர்வதேச கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட வேண்டும், அப்போதுதான் அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழவும் பாக்கிஸ்தானிய ஷெல் தாக்குதலில் இருந்து தங்களையும் தங்கள் உடைமைகளையும் காத்துக்கொள்ள முடியும்"

"எல்லைகளுக்கு அருகே வாழும் மக்கள் சமூக, கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளனர், சாலை போக்குவரத்து, மின்சாரம், மருத்துவ வசதிகள், கல்வி மற்றும் நீர் வழங்கல் போன்ற அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு இல்லை.

வளர்ச்சி ஏதுமற்ற எல்லைப் பகுதியில் வாழ்பவர்களுக்காகவென்று பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு குஜ்ஜார் பிரிவுத் தலைவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in