Published : 16 Mar 2019 03:18 PM
Last Updated : 16 Mar 2019 03:18 PM
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசிதரூரின் அத்தை, மாமா உள்ளிட்ட உறவினர்கள் பாஜகவில் இணைந்தனர்.
கொச்சியில் பாஜக சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காங். எம்.பி.சசிதரூரின் அத்தை சோபனா சசிகுமார், அவரின் கணவர் சசிகுமார், மற்றும் பல்வேறு உறவினர்கள் என மொத்தம் 14 பேர் பாஜகவில் முறைப்படி இணைந்தனர். பாஜகவில் இணைந்த அனைவருக்கும், மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த இரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்த நிலையில், நேற்று சசிதரூர் குடும்பத்தார் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பேசுகையில், "பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சசிதரூர் குடும்பத்தினர். இவர்கள் தொடக்கத்தில் இருந்தே பாஜக பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கூறுவதில் மகிழ்கிறேன்" எனத் தெரிவித்தார்.
சசிதரூரின் உறவினர்கள் நிருபர்களிடம் கூறுகையில், "நாங்கள் அனைவரும் சசிதரூரின் நெருங்கிய உறவினர்கள். அனைவரும் நீண்டகாலமாக பாஜகவின் ஆதரவாளர்களாக இருந்தோம். ஆனால், பாஜகவில் இணைவதற்காக இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏன் ஏற்பாடு செய்தார்கள் எனத் தெரியவில்லை. பாஜக ஆதரவாளர்கள் மட்டும் வேறு கருத்து ஏதும் கூற இயலாது" எனத் தெரிவித்துவிட்டனர்.
எர்ணாகுளம் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் கே.எஸ். ஷைஜூ கூறுகையில், "சசிதரூரின் உறவினர்கள் வேறுஒரு நிகழ்ச்சிக்காக இங்கு வந்திருந்தனர். அவர்களுக்கு பாஜக உறுப்பினர் அட்டை பெற்று, முறைப்படி பாஜகவில் இணைய வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். அதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது" எனத் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி சார்பில் இந்த முறை சசிதரூரை காங்கிரஸ் கட்சி நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT