Published : 28 Mar 2019 02:13 PM
Last Updated : 28 Mar 2019 02:13 PM
இந்தியாவின் ஹீரோ தேவையா, அல்லது பாகிஸ்தானின் ஹீரோ தேவையா என்பதை மக்கள் வரும் மக்களவைத் தேர்தலில் முடிவு செய்வார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. உ.பியில் உள்ள 80 தொகுதிகளில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் மற்றும் பாஜக தனித்தனியாக போட்டியிடுகின்றன.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் இன்று தொடங்கினார். பாஜக சார்பில் மீரட் நகரில் நடத்தப்பட்ட தேர்தல் பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த தேசம் வெற்று கோஷமிடும் ஏராளமான அரசுகளை பார்த்திருக்கிறது. ஆனால், முதல்முறையாக, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனும் தீர்மானம் கொண்ட பாஜக தலைமையிலான அரசை இப்போதுதான் பார்க்கிறது.
நிலமாக இருந்தாலும் சரி, வானமாக இருந்தாலும் சரி, விண்வெளியாக இருந்தாலும் சரி, உங்களின் காவலாளி அரசு துணிச்சாலாக காவல்காத்து துல்லியத் தாக்குதல் நடத்தும்.
பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்களை அழித்தோம், விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில் மிஷன் சக்தி திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம்.
ஆனால், இந்த அரசு செய்கின்ற சாதனைகள் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி பாகிஸ்தானுக்கு ஹீரோவாக இருக்கிறார்கள்.
ஆனால், இந்த தேர்தலில், பாகிஸ்தானின் ஹீரோ வேண்டுமா அல்லது இந்தியாவின் உண்மையான ஹீரோ வேண்டுமா, ஆதாரம் வேண்டுமா உண்மையான ஹீரோ வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
இந்த தேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முடிவை பாஜக எடுத்திருக்கிறது. ஏனென்றால், முழுமையான அரசால்தான் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும். வானிலும், விண்வெளியிலும், நிலத்திலும் துணிச்சலாக எந்தவிதமான தாக்குதலையும் நிகழ்த்த முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT