Published : 17 Mar 2019 05:35 PM
Last Updated : 17 Mar 2019 05:35 PM
நாளைமுதல் உ.பியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேச அரசியலில் மாற்றத்தைக்கொண்டுவருவது என்னுடைய பொறுப்பு அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கிழக்கு உத்தரப் பிரதேசத்திற்கு பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியாங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை பிரயாக்ராஜிலிருந்து வாரணாசிக்கு கங்கா படகு சவாரியில் செல்கிறார். மனாயாவிலிருந்து படகில் செல்லும் பிரியங்கா அங்கு மாணவர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.
அதற்குமுன் உத்தரப் பிரதேச மக்களுக்கு ஒரு திறந்தமடலை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
மாநில அரசியலில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது, இதனால் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் துயரத்தில் உள்ளனர், தங்கள் அவலத்தையும் வலியையும் பகிர்ந்து கொள்ளவே அவர்கள் விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் பேசமுடியாதபடி தேர்தல் கணிதத் தாளில் அவர்களது குரல் அடக்கி வைக்கப்பட்டுள்ளது.
உண்மை மற்றும் தீர்மானத்தின் அடிப்படையில் நாம் இங்கு அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்பதை நான் உங்களுக்கு உறுதிபடுத்த விரும்புகிறேன்.
இந்த ஆன்மிக நிலத்தின்மீது நான் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் தேவைகள், உங்கள் பிரச்சினைகளை காதுகொடுத்து கேட்காமல் இங்கு எந்தவித அரசியல் மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என நான் நம்புகிறேன். எனவே, நான் உங்களோடு பேச உங்கள் வீடுதேடி வருகிறேன்.
பஸ், ரயில், படகு, பாத யாத்திரைகள் மூலம் வந்து உங்களோடு இணைய விரும்புகிறேன். கங்கை உத்தரபிரதேசத்தின் முதுகெலும்பாக இருக்கிறாள். அவள் உதவியோடு நான் உங்களை வந்தடைவேன்.
இவ்வாறு திறந்த மடல் ஒன்றில் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT