Last Updated : 16 Mar, 2019 04:58 PM

 

Published : 16 Mar 2019 04:58 PM
Last Updated : 16 Mar 2019 04:58 PM

சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டபோது மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்தார்: ராகுல் கடும் தாக்கு

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டபின்னரும் நமது பிரதமர் கார்பெட் தேசிய பூங்காவில் கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருப்பதில் பிஸியாக இருந்தார் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

உத்தரகாண்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்தார். டேராடூனில் பரேட் கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது:

புல்வாமாவில் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு அடுத்த சிறிது நேரத்திலேயே நாட்டு மக்களின் உணர்வோடும் அரசோடும் நாங்கள் இணைந்துகொண்டோம். எனது அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் ரத்துசெய்துவிட்டேன்.

ஆனால் நமது ஜவான்கள் கொல்லப்பட்டபோது நரேந்திரடி மோடி என்ன செய்துகொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். நேஷ்னல் ஜியாகிரபிக் டாக்குமெண்டரிக்காக கார்பெட் தேசிய பூங்காவில் கேமராவுக்கு அவர் காட்சியளித்துக்கொண்டிருந்தார்(கூட்டத்தினரிடையே ஆரவார ஒலி).

புல்வாமா சம்பவம் நடைபெற்ற அன்றைய தினத்தில் சம்பவத்தைத் தொடர்ந்து, நேஷ்னல் ஜியாரபிக் ஆவணப்படத்திற்கான படப்பிடிப்பில் கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் செலவிட்டிருக்கிறார்; ஆனால் அவர் இப்போதும் தேசபக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிஅதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படும். இத்தொகை பயனாளிகளின் கணக்குகளில் நேரடியாக சென்றுவிடும்.

இது போன்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தப்படும் உலகின் முதல்நாடாக இந்தியா இருக்கும்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இக்கூட்டத்தின்போது முன்னாள் உத்தரகாண்ட் முதல்வரின் மணிஷ் காந்துரி, மற்றும் பாஜகவைச் சேர்ந்த பிசி காந்தூரி ஆகியோர் ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.

ஏப்ரல் 11ல் தொடங்கி மே 19ல் வரை 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ல் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x