

ஜமாத் இ இஸ்லாமி இயக்கம் மீது மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காஷ்மீர் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பஷீர் அஹமது ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
''இது ஏற்கத்தக்கதல்ல. இது ஒரு மதம் தொடர்பான இயக்கம். காஷ்மீருக்கு கடினமான சூழ்நிலைகள் ஏற்பட்டபோது மக்களுக்காக பணியாற்றிய ஒரு மத அமைப்பு இது. காஷ்மீரில் 400 பள்ளிக்கூடங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மசூதிகளையும் கட்டியுள்ளனர்.
ஏன் இந்த அரசாங்கம், உண்மையிலேயே நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இயக்கங்களைத் தடை செய்வதில்லை''.
இவ்வாறு வர்த்தக சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த வியாழன் அன்று ஐந்தாண்டு காலத்திற்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜமாத் இ இஸ்லாத் இயக்கத்தை தடை செய்து உத்தரவிட்டது.
காஷ்மீரில் உள்ள முக்கிய இரு அரசியல் கட்சிகளும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்திய போதிலும், பிடிபி தலைவர் மெஹ்பூபா முஃப்தி ஜமாத்-இ-இஸ்லாமைத் தடை செய்வது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்தார்.