Published : 13 Mar 2019 02:56 PM
Last Updated : 13 Mar 2019 02:56 PM
தேர்தல் என்று வந்துவிட்டாலே கள்ள ஓட்டைத் தடுப்பதற்காகவும், வாக்களித்தமைக்கு அடையாளமாக வாக்காளர்களுக்கு கையில் வைக்கப்படும் அழியாத மை நினைவுக்கு வந்துவிடும்.
வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் இந்த அழியாத மை தயாரிப்பு முழுவீச்சில் தற்போது நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள மைசூர் பெயின்ட்ஸ் அன்ட் வார்னிஷ் லிமிட்(எம்பிவிஎல்) நிறுவனம்தான் பிரத்யேகமாக அழியாத மையைத் தயாரித்து வருகிறது. இந்தத் தேர்தலில் 90 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களுக்காகவே இந்த மை தயாரிப்பு வேகமாக நடந்து வருகிறது.
அந்த நிறுவனத்தில் தரப்பில் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் மை இந்த முறை ரூ.32 கோடிக்கு ஆர்டர் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். ஏறக்குறைய 10 மில்லி அளவு கொண்ட 26 லட்சம் குப்பிகள் தயாரிக்கிறோம். இதுவரை 20 லட்சம் குப்பிகள் தயார் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையம் உத்தரவின்படி பல்வேறு மாநிலங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு குப்பியில் இருக்கும் மை மூலம் 700 முதல் 750 வாக்களர்களின் விரலில் மை வைக்க முடியும்" எனத் தெரிவித்தனர்.
எம்பிவிஎல் நிறுவனத்தின் மேலாளர் சி. ஹராகுமார் கூறுகையில், "கடந்த 2014-ம் ஆண்டு அளித்த ஆர்டரைக் காட்டிலும் கூடுதலாக 4 லட்சம் குப்பிகளை தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்துள்ளது. நாங்கள் 22 லட்சம் குப்பிகளை கடந்த மக்களவைத் தேர்தலுக்கு அனுப்பி வைத்தோம். இந்த முறை அதைக்காட்டிலும் 4 லட்சம் கூடுதலாகும்" எனத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 18 மற்றும் 23 தேதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு 1.32 லட்சம் மை குப்பிகள் தேவைப்படும். தேர்தல் ஆணையம் கோரியுள்ள 26 லட்சம் மை குப்பிகளை அடுத்த சில வாரங்களில் தயாரித்து அளித்து விடுவோம் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எம்பிவிஎல் நிறுவனம் கர்நாடக அரசால் நடத்தப்படும் நிறுவனமாகும். நாட்டில் நடக்கும் அனைத்து தேர்தல்களுக்கும் வாக்காளர்களின் கைகளில் வைக்கப்படும் மையை 1962-ம் ஆண்டில் இருந்து இந்த நிறுவனமே தயாரித்து வழங்கி வருகிறது.
கடந்த 1937-ம் ஆண்டு மைசூரு மகாராஜா, நல்வாடி கிருஷ்ணராஜா வாடியார் இந்த எம்பிவிஎல் நிறுவனத்தை உருவாக்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT