Published : 01 Mar 2019 03:53 PM
Last Updated : 01 Mar 2019 03:53 PM
திருவனந்தபுரம் விமான நிலையத்தின் நிர்வாக மற்றும் பாராமரிப்பு பணிகளை அதானி நிறுவனத்துக்கு வழங்க கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பணியில் தனியாரையும் இணைத்துக் கொள்ள சில மாதங்களுக்கு முன்பு முடிவெடுக்கப்பட்டது. இதன்படி திருவனந்தபுரம், கவுகாத்தி, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர் விமான நிலையங்களின் அன்றாட பணிகள் மற்றும் பராமரிப்பு முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. .
இதற்கான முதலீட்டை 100 சதவீதம் தனியார் நிறுவனங்களே செய்யும். அதேசமயம் வருவாயில் குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனங்கள் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு செலுத்தும். அரசு - தனியார் துறை பங்களிப்புடன் விமான நிலைய பராமரிப்பு நடைபெறும் என மத்திய அரசு செய்து வருகிறது.
இதில் 6 விமான நிலையங்களுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. இதில் 6 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்களை சாதகமான தொகையை அதானி நிறுவனம் கோரியுள்ளது. இதன் மூலம் 5 விமான நிலையங்கள் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதனிடையே திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்க கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ‘‘கேரளாவில் கண்ணூர் மற்றும் கொச்சி விமான நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை ஏற்கெனவே கேரள அரசு நிறுவனம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. கேரள தொழில் வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இதற்காககவே தனியாக கம்பெனி ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தை இந்த நிறுவனத்துக்கு வழங்காமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கேரள அரசு நிறுவனத்திடம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை வழங்குவதால் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே பயன்பெறும். அதை விடுத்து அனுபவமே இல்லாத தனியார் நிறுவனத்துக்கு இந்த திட்டத்தை வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்’’ என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT