Published : 01 Mar 2019 04:00 PM
Last Updated : 01 Mar 2019 04:00 PM
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விமானம் மூலம் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கைக்கு கடைசிவரை அனுமதி அளிக்கப் பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
அபிநந்தனை அடாரி-வாகா எல்லையில் தரைவழியாக மட்டுமே அனுப்ப முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்தியாவின் மிக் ரக விமானத்தை இயக்கிய விமானி அபிநந்தன் விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
இதில் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் அந்தநாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றார். பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனை கைது செய்த தகவல் அறிந்ததும், அவரை பத்திரமாக மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது.
தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும், அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று ஒருமித்த குரல் எழுப்பினார்கள். மத்திய அரசின் தீவிர முயற்சிக்குப்பின் அமைதி நடவடிக்கையாக அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டது. இதன்பின் இன்று அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார்.
இந்நிலையில், அபிந்தனை வான்வழியாக, அதாவது விமானம் மூலம் அழைத்துவர இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்தது. இதுதொடர்பாக பாகிஸ்தானுக்கு சிறப்பு விமானத்தை அனுப்பி அபிநந்தனை அழைத்து வரவும் முடிவு செய்தது.
இந்த கோரிக்கையை பாகிஸ்தான் அரசிடமும், பாதுகாப்புத் துறையிடமும் இந்தியாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானம் பறக்க அனுமதி மறுத்த பாகிஸ்தான் அரசு, அபிநந்தனை அடாரி-வாகா எல்லைவழியாக மட்டுமே அனுப்ப முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்து இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது.இதையடுத்து பாகிஸ்தான் அரசு அடாரி-வாகா எல்லை வழியாக அபிநந்தன் அழைத்துவரப்பட உள்ளார்.
கொடி இறக்கும் நிகழ்ச்சி ரத்து
இந்நிலையில், அடாரி-வாகா எல்லையில் வழக்கமாக மாலைநேரத்தில் எல்லைப் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும், கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கும். ஆனால், இன்று அபிநந்தன் அழைத்துவரப்படுவதையடுத்து, அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்கு வழக்கமாக மக்கள் அனுமதிக்கப்படும் நிலையில், இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT