Published : 18 Mar 2019 04:07 PM
Last Updated : 18 Mar 2019 04:07 PM

பிரியங்கா காந்தியை பப்பி என்று விமர்சித்த பாஜக அமைச்சர்: வெடிக்கும் சர்ச்சை

மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, பிரியங்கா காந்தியை 'பப்பி' என்று விமர்சித்த வீடியோ வெளியானதால் சர்ச்சை வெடித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதியின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். பிரச்சாரத்துக்கு முன்னதாக பிரயாக் ராஜில் இருந்து வாரணாசி வரை தனது மூன்று நாள் யாத்திரையைத் தொடங்கியுள்ளார். இது உத்தரப் பிரதேச மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையே சனிக்கிழமை அன்று செகந்திராபாத்தில் நடந்த பொது நிகழ்ச்சியொன்றில்  மத்திய அமைச்சரும் கவுதம் புத்தா நகர் எம்.பி.யுமான மகேஷ் சர்மா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிய வீடியோவால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

வீடியோவில், பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை குறித்து விமர்சித்துள்ள மகேஷ் சர்மா, ''நாடாளுமன்றத்தில் பிரதமரைப் பார்த்து ராகுல் காந்தி கண்ணடித்தது அனைவராலும் விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த 'பப்பு' (சிறுவன்) பிரதமராக ஆசைப்படுகிறார். இப்பொழுது மாயாவதி, அகிலேஷ் யாதவுடன் 'பப்பி'யும் (சிறுமி - பிரியங்கா காந்தி) இந்தப் போட்டியில் இணைந்துவிட்டார். அவர் (பிரியங்கா) எதைப் புதிதாக செய்துகொண்டிருக்கிறார்?

முன்னதாகவும் அவர் சோனியா காந்தியின் மகளாகத்தானே இருந்தார். முதலில் நேரு. அடுத்து ராஜீவ், பின்னர் சஞ்சய், பிறகு ராகுல், இப்போது பிரியங்கா. இன்னும் சில காந்திகள்தான் வந்துகொண்டிருக்கிறார்கள். வேறு மாற்றம் எதுவும் இல்லை'' என்று பேசியுள்ளார்.

பாஜகவினர் ராகுல் காந்தியை 'பப்பு' என்று தொடர்ந்து விமர்சித்துவரும் வேளையில், அவரின் சகோதரி பிரியங்கா காந்தியை 'பப்பி' என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியிருப்பது காங்கிரஸார் மத்தியில் காட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x