Last Updated : 18 Mar, 2019 08:58 AM

 

Published : 18 Mar 2019 08:58 AM
Last Updated : 18 Mar 2019 08:58 AM

வேட்பாளராக அறிவித்த பின்னர் கட்சி தாவிய முன்னாள் அமைச்சர்

ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அடலா பிரபாகர் ரெட்டி, அக்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் நேற்று இணைந்தார்.

வேட்பாளர் பட்டியலில் பிரபாகர் ரெட்டியின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்திருப்பது தெலுங்கு தேசம் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஆந்திராவில் மக்களவைத் தொகுதிகளுக்கும், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தெலுங்கு தேசம் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 125 வேட்பாளர்களைக் கொண்ட அந்தப் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அடலா பிரபாகர் ரெட்டியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. நெல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த பிரபாகர் ரெட்டி, அக்கட்சியில் இணைவதாக அறிவித்தார். பிரபாகர் ரெட்டியின் இந்த செயலால் தெலுங்கு தேசம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, தெலுங்கு தேசம் கட்சியின் மற்றொரு வேட்பாளரான தோட்டா திரிமூர்த்துலுவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைவது தொடர்பாக பேச்சுவாரத்தை நடத்தி வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த எம்.பி. பட்டா ரேணுகா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணையவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், தெலுங்கு தேச முன்னாள் எம்.பி. வங்க கீதாவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் நேற்று இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x