Last Updated : 01 Mar, 2019 01:40 PM

 

Published : 01 Mar 2019 01:40 PM
Last Updated : 01 Mar 2019 01:40 PM

ஜமாத் -இ -இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்புக்குத் தடை: மத்திய அரசு அதிரடி

ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜமாத் -இ -இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும், மாநிலத்தில் பிரவினைவாத செயலை ஊக்குவிப்பதாகவும் தகவல் வந்ததையடுத்து அரசு தடை செய்தது.

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டபின், ஜம்மு காஷ்மீரில் போலீஸார் பிரிவினைவாத கட்சியின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ஏறக்குறைய 100 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஜமாத்- இ- இஸ்லாமி அமைப்பின் அப்துல் ஹமிது பியாஸ், செய்தித்தொடர்பாளர் ஜாஹித் அலி ஆகியோரும் அடங்குவர்.

ஜமாத் -இ -இஸ்லாமி அமைப்பு கடந்த காலங்களில் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் கூறி கடந்த 1990களில் தடை செய்யப்பட்டு பின்னர் 1995-ம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.

 இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், ஜமாத் -இ -இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும், தீவிரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், மாநிலத்தில் பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடுவதிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் குழுவில் இந்த அமைப்பைத் தடை செய்து முடிவு செய்யப்பட்டது.

 இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், " ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜாமாத் -இ -இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்பு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தடை செய்யப்படுகிறது. தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் ஜமாத் -இ -இஸ்லாமி அமைப்பு இருப்பதும், தீவிரவாத செயல்களுக்கு உதவி செய்வதும், மாநிலத்தில் பிரிவினையைத் தூண்டிவிடவும் முயல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தேசத்தில் பிரிவினைக்கு முயன்று, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்துச் செயல்படுகிறது. இதனால், மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆதலால், ஜமாத் -இ -இஸ்லாமி அமைப்பை தடை செய்கிறோம் " எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x