

கர்நாடக மக்களவைத் தேர்தலில் புதிய திருப்பமாக, பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட தங்களுக்கு சரியான வேட்பாளர் இல்லை எனக் கூறி மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸிடம் திருப்பி கொடுத்து விட்டது. வேட்புமனுத்தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் வலிமையான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜகஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. இதையடுத்து மக்களவைத் தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரியில் மஜத மாநில தலைவர் விஷ்வநாத், காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்துதொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் கடந்த மாதம் காங்கிரஸ் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபாலை முதல்வர் குமாரசாமி சந்தித்துப் பேசினார். அப்போது மஜத தரப்பில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 12 தொகுதிகள் கோரப்பட்டன. அதை ஏற்க மறுத்த காங்கிரஸ், 6 தொகுதிகளே ஒதுக்கமுடியும் என தெரிவித்தது.
இதையடுத்து மஜத தேசியதலைவர் தேவகவுடா, டெல்லியில்காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து 10 தொகுதிகள் ஒதுக்குமாறு கோரினார். அதற்கும் காங்கிரஸ் மறுத்தநிலையில் பின்னர் 8 தொகுதிகளை மஜத போராடி பெற்றது. அத்துடன், தாங்கள் நினைத்தபடி 10 தொகுதிகள் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார் தேவகவுடா.
இதன்படி அந்த கட்சிக்கு, ஹாசன், மண்டியா, துமக்கூரு, ஷிமோகா உள்ளிட்ட 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிக்கோடி, பீதர், குல்பர்கா, கோலார் உள்ளிட்ட 20 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பாஜக 28தொகுதிகளிலும் தனித்து களம்காண்கிறது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக பெங்களூரு வடக்கு தொகுதியில் தங்களிடம் பலமான வேட்பாளர் இல்லாததால் காங்கிரஸிடமே திருப்பி ஒப்படைப்பதாக மஜக இன்று அறிவித்துள்ளது. அந்த தொகுதியில் நாளை வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெறும் நிலையில் இன்று இந்த முடிவை தேவகவுடா எடுத்துள்ளார்.
தொடக்கத்தில் பெங்களூரு வடக்கு தொகுதியில் தேவகவுடா போட்டியிடக்கூடும் என தகவல் வெளியாகியது. அவர் வழக்கமாக போட்டியிடும் ஹசன், மாண்டியா உள்ளிட்ட தொகுதிகளை தனது பேரன்கள் மற்றும் உறவினர்களுக்கு ஒதுக்கி விட்டார். அவர் போட்டியிட சரியான தொகுதி கிடைக்காததால் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார்.
ஆனால் பாஜகவின் சதானந்த கவுடா அங்கு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் வலிமையான வேட்பாளர் என்பதால் அங்கு போட்டியிடும் முடிவை கைவிட்ட தேவகவுடா தற்போது தும்கூருவில் போட்டியிட முடிவு செய்துள்ளார். பெங்களூர் வடக்கு தொகுதிக்கு தேடி தேடி பார்த்தும் சரியான வேட்பாளர் கிடைக்காததால் கடைசி நிமிடத்தில் அந்த தொகுதியை காங்கிரஸிடமே ஒப்படைத்து விட்டார்.
தங்களுக்கு 7 தொகுதிகள் போதும் எனவும் மஜத கட்சியினர் தெரிவித்துள்ளனர். அந்த தொகுதியில் போட்டியிட எந்த ஏற்பாடும் செய்யாத நிலையில் கடைசி கட்டத்தில் தொகுதி வந்துள்ளதால் அதற்கான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.