Published : 08 Mar 2019 01:47 PM
Last Updated : 08 Mar 2019 01:47 PM

சமாஜ்வாதி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மெயின்புரியில் முலாயம் சிங் போட்டி: தந்தைக்கு வாய்ப்பு தந்தார் அகிலேஷ்

சமாஜ்வாதி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 73 இடங்களில் வென்றது. வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்க பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் நடவடிக்கை எடுத்து வந்தன.

இதன்படி, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் எனவும். அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டும் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதாகவும் அக்கட்சிகள் முடிவு செய்தன. இதையடுத்து காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைக்க அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தநிலையில், சமாஜ்வாதி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மெயின்புரி தொகுதியில் முலாயம் சிங் யாதவ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்வான் தொகுதியில் தர்மேந்திர யாதவும், பெரோஸோபாத்தில் அக்ஷய் யாதவும் போட்டியிடுகின்றனர். எடாவா தனித் தொகுதியில் கமலேஷ் கத்ரியாவும், ரோபர்ஸ்கஞ்ச் தொகுதியில் பைலால் கோல், பஹ்ராச் தொகுதியில் ஷபிர் பல்மிகியும் போட்டியிடுகின்றனர்.

மகன் அகிலேஷ் தலைமயில் சமாஜ்வாதி கட்சி செயல்பட்டு வரும் நிலையில் அதிருப்தியில் உள்ள முலாயம் சிங்குக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x