Last Updated : 14 Mar, 2019 09:58 AM

 

Published : 14 Mar 2019 09:58 AM
Last Updated : 14 Mar 2019 09:58 AM

விமானி அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமான பைலட்டின் அடையாளம் தெரிந்தது: பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானத்தை இயக்கிய விமானியின் அடையாளம் தெரிந்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் பல தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இதற்கு அடுத்த நாளில், பாகிஸ்தானின் எப்.16 போர் விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றது. அப்போது, இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன், அந்த விமானத்தை துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தினார்.

இந்த சம்பவத்தின்போது விமானம் நிலைத்தடுமாறியதால் பாகிஸ்தானுக்குள் விழுந்த அபிநந்தனை, அந்நாட்டு ராணுவத்தினர் சிறைப்பிடித்தனர். பின்னர், சில நாட்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, இந்திய எல்லைக்குள் தங்கள் நாட்டின் போர் விமானம் நுழைந்ததையும், அது சுட்டு வீழ்த்தப்பட்டதையும் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:பாகிஸ்தானை பொறுத்தவரை, எதையும் ஏற்கும் மனநிலையில் அது இல்லை. எல்லாவற்றையும் மறுத்து வருகிறது. கார்கில் போரில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரர்களின் தியாகத்தை கூட அந்நாடு அங்கீகரிக்கவில்லை. அந்த வகையிலேயே, தற்போது பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையும் அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எப்-16 போர் விமானத்தை இயக்கிய விமானியின் அடையாளம் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் பகுதியில் விழுந்த அவரை அங்குள்ள கிராம மக்கள் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். ஆனால், அவர் குறித்த விவரத்தை தற்போது வெளியிட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x