Published : 14 Mar 2019 10:06 AM
Last Updated : 14 Mar 2019 10:06 AM
மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பாஜக பொதுச் செயலாளர்கள் பூபேந்திர யாதவ், கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோர், தலைமை தேர்தல் ஆணையத்தின் உயரதிகாரிகளை டெல்லியில் நேற்று சந்தித்து மனு அளித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
மக்களவை தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற, மேற்குவங்க மாநிலத்தை மிகவும் பதற்றமான மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டோம். மேலும், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மத்திய படைகளை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
தவிர மக்களவை தேர்தல் பாரபட்சமின்றி நடைபெற போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்செய்ய வேண்டும். அகமதாபாத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, பிரதமர் மோடிமீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார். அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, மோடி மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார். எனவே,அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறோம். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம்ஆண்டு தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 34 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 4, பாஜக 2, மார்க்சிஸ்ட் கட்சி 2 இடங்களைக் கைப்பற்றின. இந்தத் தேர்தலில் மேற்குவங்கத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT