Published : 12 Mar 2019 03:18 PM
Last Updated : 12 Mar 2019 03:18 PM
கேரளாவில் தொகுதி பங்கீட்டில் கோபமடைந்துள்ள கேரள காங்கிரஸ் தலைவர் ஜோசப்பை பாஜக தலைவர்கள் தங்கள் அணிக்கு கொண்டு வர பேச்சுவார்ததை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாநிலங்களில் கேரளாவிலும் பாஜகவுக்கு போதிய வலிமை இல்லாததால் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க பாஜக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தெற்கு கேரளாவில் பாஜக கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகமுள்ள ஓரிரு தொகுதிகளில் கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களை பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த சிலரை சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், கோட்டயம், மாவெல்லிக்கரா, இடுக்கி உள்ளிட்ட்ட தொகுதிகளில் பாஜக ஆதரவுடன் கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிடலாம் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கிறிஸ்தவ மக்களின் வலிமை மிக்க கட்சியான கேரள காங்கிரஸ் சார்பில் கோட்டயம் தொகுதியில் வேட்பாளராக தாமஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோசப் அந்த தொகுதியில் போட்டியிட விரும்பிய நிலையில் அவருக்கு தொகுதி மறுக்கப்பட்டுள்ளது.
கேரள காங்கிரஸ் கே.எம். மாணி, ஜோசப்புக்கு தொகுதியை வழங்க முன் வரவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஜோசப்பை கேரள பாஜக தலைவர்கள் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவர் ஒப்புதல் தெரிவித்தால் பாஜக ஆதரவுடன் ஜோசப் களம் இறங்குவார் என தெரிகிறது. ஜோசப் பாஜக ஆதரவுடன் போட்டியிட்டால் கோட்டயம் மட்டுமின்றி இடுக்கி தொகுதியில் காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனிடையே ஜோசப்பை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இடுக்கி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவுள்ள நிலையில் அந்த தொகுதியில் செல்வாக்கு மிக்க ஜோசப்பை புறக்கணக்க காங்கிரஸ் விரும்பவில்லை. தொடுபுழா தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோசப் 45 ஆயிரத்து 587 வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT