Published : 01 Mar 2019 02:52 PM
Last Updated : 01 Mar 2019 02:52 PM
இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யப்படுவதைத் தொடர்ந்து வாகா எல்லையில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கி உள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று முன்தினம் நடந்த விமான தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப் பிடித்தது.
இருநாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்த நிலையில் அதனை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கின. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டன.
இதனிடையே நேற்று (வியாழக்கிழமை) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், ''அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார்'' என்று அறிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி இன்று பிற்பகலில், வாகா எல்லை வழியாக இந்திய விமானி அபிநந்தன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வாகா எல்லையில் இந்திய விமானி அபிநந்தனை வரவேற்க பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். கையில் இந்திய கொடியுடன் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பலரும் அபிநந்தனை வரவேற்க காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT