Published : 31 Mar 2019 07:06 AM
Last Updated : 31 Mar 2019 07:06 AM

பேரவைக்கு 24 முறை, விசாரணைக்கு 248 முறை.. ஜெகன்மோகன் ரெட்டியை விமர்சித்த சந்திரபாபு நாயுடு

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி சந்திரபாபு நாயுடு நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டம், இச்சாபுரம் பகுதியில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றி ஆந்திர மாநிலத்திற்கு அவசியம். அப்போதுதான் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். எதிர்கட்சித் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி, மக்களின் பிரச்சினைகளை சட்டப்பேரவையில் பேசுவது இல்லை. ஆளும் கட்சி மீது வீண்பழி சொல்லவே அவருக்கு நேரம் சரியாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 24 முறை மட்டுமே அவர் சட்டப்பேரவைக்கு வந்தார். ஆனால், அவர் மீதான வழக்குகள் தொடர்பாக 248 முறை பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்றுள்ளார். இப்படிப்பட்ட ஒருவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டுமா? நான் எந்தவித வளர்ச்சிப்பணியும் செய்யவில்லை என பிரதமர் மோடி கூறுகிறார்.

மோடி தயாரா?

இதுகுறித்து மக்கள் முன்பு அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மோடி தயாரா? கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில் மோடி என்ன செய்தார், நான் என்ன செய்தேன் என்பது குறித்து மோடி விவாதிக்க தயாரா? இவர் தனது பேச்சால் கோட்டை கட்டுகிறார். அது நிலைக்காது. அரசியல் குறித்து நடிகர் பவன் கல்யாண் இன்னும் அறிந்து கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் மோடி, ஜெகன் மோகன் ரெட்டி, பவன் கல்யாண் ஆகியோரின் கட்சிகளை நீங்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x