Last Updated : 12 Mar, 2019 09:18 AM

 

Published : 12 Mar 2019 09:18 AM
Last Updated : 12 Mar 2019 09:18 AM

மகாத்மாவின் அன்பு இந்தியா வேண்டுமா, கோட்சேவின் வெறுப்பு இந்தியா வேண்டுமா?- ராகுல் காந்தி கேள்வி

மகாத்மா காந்தியின் அன்பு நிறைந்த இந்தியா அல்லது, வெறுப்பு நிறைந்த நாதுராம் கோட்சேவின் இந்தியா இதில் எது வேண்டும் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

 புதுடெல்லியில் உள்ள  இந்திரா காந்தி உள்ளரங்கில் நேற்று நடந்த  காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

உங்களுக்கு மகாத்மா காந்தியின் அன்பு, சகோதரத்துவம் நிறைந்த இந்தியா வேண்டுமா, அல்லது வெறுப்பு, அச்சம் நிறைந்த நாதுராம் கோட்சேவின் இந்தியா வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி, எந்தவிதமான அச்சமும் இன்றி சிறையில் பல ஆண்டுகள் இருந்து, ஆங்கிலேயர்களிடம் அன்புடன் பேசினார். ஆனால், சவார்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து வெளியே வந்தார்.

புல்வாமாவில் 40 சிஆர்பிஎவ் வீரர்கள் கொல்லப்பட்ட காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சிறையிலிருந்து யார் விடுத்தது, எந்த கட்சி விடுவித்தது.

நீங்கள் சிறிது நினைத்துப் பாருங்கள், 56 இஞ்ச் மார்பு வைத்திருப்பவர்களின் முந்தைய அரசும், தற்போதைய தேசியப்  பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜி்த் தோவலும் சேர்ந்து, விமானத்தில் மசூத் அசாரை அழைத்துச் சென்று, மசூத் அசாரை கந்தகாரில் ஒப்படைத்தனர்.

இதுவரை காங்கிரஸ் கட்சி சார்பில் இரு பிரதமர்கள் தீவிரவாதத்துக்குப் பலியாகி இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் தலைவணங்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நாட்டு மக்களிடம் ஊழலை ஒழிப்பேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார்.  அதன்பின் தன்னை காவலர் என்றும், நல்ல காலம் பிறக்கும் என்றார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் அல்லாத இந்தியா என கோஷமிட்டார், இப்போது  காவலரே திருடராக மாறிவிட்டார்

மக்களவையில் நமது பிரதமர் ஒன்றரை மணி நேரம் பேசினார், ஆனால், ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் குறித்து 4 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி குறித்துப் பேசினாரே தவிர, ஒரு வார்த்தைகூட அனில் அம்பானி குறித்துப் பேசவில்லை.

மேக் இன் இந்தியா குறித்து பேசிவருகிறார் மோடி. ஆனால், சட்டை, ஷீ, அவர் செல்பி எடுக்கும் செல்போன் அனைத்தும் சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்டவை.

காங்கிரஸ் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடிமக்களுக்கும் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் திட்டம் கொண்டுவரப்படும். விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3.5 கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார், ஆனால், காங்கிரஸ் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஊதியத்திட்டத்தை கொண்டு வரும்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது நாங்கள் அளித்த வாக்குறுதியின்படி, ஆட்சிப் பொறுப்பேற்றவுடனஅ விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆமாதபாதில் சீன அதிபருடன்  சேர்ந்து பிரதமர் மோடி ஊஞ்சலில் ஆடினால். மற்றொருபுறம் சத்தமில்லாமல் டோகாலாமில் சீன படை ஊடுருவியது. சீனப் பிரதமர் அப்போதே மோடிக்குத் தெளிவான செய்தியை உரைத்துவிட்டார். நீங்கள் பலவீனமானவர், சீன ராணுவத்தை டோக்லாமுக்கு அனுப்புகிறேன், உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று உரைத்தார். சீனாவின் முன் மோடி பணிந்தார், கெஞ்சினார்.

 இவ்வாறு ராகுல் காந்த பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x