Last Updated : 25 Mar, 2019 12:02 PM

 

Published : 25 Mar 2019 12:02 PM
Last Updated : 25 Mar 2019 12:02 PM

மக்களவை தேர்தலில் வெளியாகும் மோடி, ராகுல் வரலாறு குறித்த திரைப்படங்கள்: ஆணையத்திடம் சிக்குமா?

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பற்றிய திரைப்படங்கள் மக்களவை தேர்தலில் வெளியாக உள்ளன. இதனால் அவை இரண்டும் மத்திய தேர்தல் ஆணையத்திடம் சிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ’பிஎம் நரேந்திர மோடி’ எனும் பெயரில் தயாராகி வருகிறது. பாலிவுட்டின் பிரபல நடிகரான விவேக் ஓபராய் அப்படத்தில் மோடியாக நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இதனால், முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கு மறுநாள் ஏப்ரல் 12-ல் வெளியிடத் திட்டமிட்டப்பட்டு வருகிறது.

இதேபோல், ‘மை நேம் இஸ் ரா கா’ எனும் பெயரில் ராகுலின் வாழ்க்கையும் திரைப்படமாகி வருகிறது. இப்படத்தை, ரூபேஷ் பவுல் இயக்குகிறார். இவர், செயிண்ட் டிராகுலா மற்றும் காமசூத்ரா ஆகிய 3டி படங்களை இயக்கியதால் புகழ் பெற்றவர்.

இந்திரா, ராஜீவ், சோனியா மற்றும் பிரியங்கா பாத்திரங்களையும் கொண்ட இப்படத்தில் ராகுலின் இளமை வாழ்க்கை அதிகம் இடம்பெற்றுள்ளது. இது மோடியின் படம் வெளியான ஓரிரு வாரங்களுக்கு பின் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களும் தேர்தல் ஆணையத்தின் பார்வையில் இருந்து தப்புமா எனும் கேள்வி எழுந்துள்ளது. திரைப்படங்களின் அனுமதியை, ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் அளிக்கிறது.

எனினும், தேர்தல் போட்டியிடுபவர்கள் மீதான காட்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் கொண்ட வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு ஆணையத்தின் அனுமதி தேவை.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரம் கூறும்போது, ‘இத்திரைப்படத்தை பார்க்காமல் அதற்கு தடை இருக்குமா என எங்களால் கூற முடியவில்லை 

இரண்டு படங்கள் பற்றி குறிப்பான புகார்கள் எதுவும் வந்தால் அதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இப்படங்கள் திரைக்கு வருமுன் அதன் விளம்பரங்கள் மீதும் எங்கள் கண்காணிப்பு இருக்கும்.

ஏனெனில், தேர்தல் பிரச்சாரத்தை மனதில் வைத்து திரைப்படத்தின் பெயரில் செய்யப்படும் விளம்பரங்களுக்கும் தடை இருக்கும்.’ எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, மோடி மீதான திரைப்படங்களின் விளம்பரம் டெல்லியின் இரண்டு இந்தி நாளிதழ்களில் முழுப்பக்கமாக வெளியாகி இருந்தது. இது தேர்தல் விளம்பரம் போல் இருந்த காரணத்தால் அதற்கு தன், ’ஊடக விளம்பரச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு’வின் அனுமதி பெற ஆணையம் நோட்டீஸ் அளித்தது.

தேர்தல் பிரச்சாரத்தை வெளிப்படுத்துவதாக இருந்தால் அந்த விளம்பரத்தின் தொகை, நாளிதழ் வெளியான தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள் செலவுப்பட்டியலில் சேர்க்கப்படும்.

தேர்தலை மனைதில் வைத்து திரைப்படங்கள் வெளியிடப்படுவது முதன்முறை அல்ல. கடந்த ஜனவரி 11-ல் ’தி ஆக்சிடண்டியல் பிரைம் மினிஸ்டர்’ எனும் பெயரில் மன்மோகன்சிங் பிரதமர் பதவியின் வாழ்க்கை திரைப்படமாக வெளியிடப்பட்டது.

முன்னதாக இதன் முன்படக்காட்சிகள்(டிரெய்லர்) கடைசியாக நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெளியாகி சர்ச்சையை கிளப்பின. இதற்கு பாஜக மீது காங்கிரஸ் புகார் வைத்தது.

எனினும், இந்த அரசியல் படம் பிரபலமாததுடன், அதன் காட்சிகளும் சட்டப்பேரவை தேர்தலின் முடிவில் பெரிதாக எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x