Last Updated : 20 Mar, 2019 05:20 PM

 

Published : 20 Mar 2019 05:20 PM
Last Updated : 20 Mar 2019 05:20 PM

தேசத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை: மாயாவதி அறிவிப்பு

தேசத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு, தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இந்நிலையில் லக்னோவில் நிருபர்களுக்கு மாயாவதி இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''தேசத்தில் நிலவும் சூழல், கட்சியின் நலன், மக்களுக்காகவும் இயக்கத்துக்காகவும் வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. நான் போட்டியிடாததற்கு இதுதான் காரணம் வேறு ஒன்றும் இல்லை.

நான் இந்த மக்களவைத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல், சிறிது காலத்துக்குப் பின் நான் சென்றாலும் அது பெரிய பிரச்சினையாக இருக்காது. அதில் பிரச்சினை ஏதும் இல்லை. மாநிலத்தில் எந்தத் தொகுதியிலும் நான் போட்டியிட்டு எம்.பி.யாக முடியும்.

என்னுடைய கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலின்போது உடன் செல்ல இருக்கிறேன். பிரச்சாரம் செய்வேன். அவர்களின் வெற்றியை உறுதி செய்வேன். நான் தேர்தலில் போட்டியிட்டால், தொண்டர்கள் கவனம் என் மீது திரும்பிவிடும்.

அது மற்ற தொகுதிகளின் பிரச்சாரத்தையும் பாதிக்கும். என்னுடைய சொந்த வெற்றியைக் காட்டிலும், ஒவ்வொரு மக்களவைத் தொகுதியின் வெற்றியும்தான் முக்கியம்''.

இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x