Published : 09 Mar 2019 06:23 PM
Last Updated : 09 Mar 2019 06:23 PM

‘‘இரு மோடிகளுக்கும் உள்ள ஒற்றுமை’’- ராகுல் காந்தி கிண்டல் ட்வீட்

பிரதமர் மோடி, நீரவ் மோடி இருவருக்குமே ஒரே பெயர், இருவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக எண்ணி செயல்படுகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த  வைரவியாபாரியும், தொழிலதிபருமான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் தற்போது சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். நீரவ்மோடி மீது நீதிமன்றங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இந்நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட் என்ட் பகுதியில் 80 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள ஒரு 3 படுக்கை அறை கொண்ட சொகுசு குடியிருப்பில் நீரவ் மோடி  வாழ்ந்துவருகிறார் என்று லண்டனில் வெளியாகும் தி டெலிகிராப் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மாதத்துக்கு ரூ.15.48 லட்சம் வாடகையில்(17 ஆயிரம் பவுண்ட்) உள்ள 3 படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி வீட்டில் நீரவ்மோடி(வயது48) வசித்து வருகிறார். தற்போது லண்டனில் புதிதாக வைர வியாபாரத்தையும் செய்து வரும் நீரவ் மோடி, தனது கெட்-அப்பை மாற்றி மீசையுடன் வலம் வருகிறார் என்றும் டெலிகிராப் நாளேடு  தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுபற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘லண்டனில் நிரவ் மோடி வசிக்கும் வீடியோ அவருக்கும், அவரது நண்பர் பிரதமர் மோடிக்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்துகிறது. இருவருமே இந்தியாவை கொள்ளைடித்தவர்கள். இருவரின் பெயரும் மோடி. இருவருமே எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மறுப்பவர்கள். இருவருமே சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணிக் கொண்டு இருப்பவர்கள். இருவருமே விசாரணையை எதிர்கொண்டு வருபவர்கள்’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x