Published : 08 Mar 2019 07:29 AM
Last Updated : 08 Mar 2019 07:29 AM
இந்திய போர் விமானங்கள் தாக்கியதில், பாகிஸ்தானின் பாலகோட் முகாம்கள் சேதம் அடைந்தது, ரேடார் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 300-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், தாக்குதலில் பாலகோட் பகுதியில் எந்த சேதமும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் அப்படியே உள்ளன. உயிர்ச் சேதமும் இல்லை என்று பல்வேறு செய்திகள் வெளிவந்தன. கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலகோட் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கட்டிடங்கள் இருப்பதையும், கடந்த மார்ச் 4-ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அந்தக் கட்டிடங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதையும் ஒப்பிட்டு செய்தி வெளியானது.
மேலும் பாலகோட் மீதான தாக்குதலுக்கு ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின.
இந்நிலையில், பாலகோட் பகுதியில் நடத்திய தாக்குதல், அதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த ரேடார் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை மத்திய அரசிடம் விமானப் படை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். அதில், பாலகோட் முகாம்கள் சேதம் அடைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது எஸ்-2000 ரக லேசர் வழிகாட்டுதலுடன் தாக்கும் குண்டுகள் வீசப்பட்டன. அந்த குண்டுகள் கட்டிடத்தை துளைத்துக் கொண்டு உள்ளே விழுந்து வெடிக்கும் திறன் கொண்டவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் கட்டிடங்கள் சேதம் அடையாதது போல் தெரிந்தாலும், உள்புறமாக குண்டு வெடித்து கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
விமானப் படை அதிகாரிகள் மேலும் கூறும்போது, ‘‘ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதல், அங்கு ஏற்பட்ட சேதங்களை உறுதி செய்வதற்கு தனியார்களிடம் இருந்து செயற்கைக்கோள் படங்களை சேகரித்துள்ளோம். அவற்றையும் நாங்கள் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT