Published : 15 Feb 2019 02:03 PM
Last Updated : 15 Feb 2019 02:03 PM
புல்வாமா தாக்குதல் செய்தி கேட்டபின், ஊடகங்களிடம் அரசியல் பேசுவது என்பது சரியானதாக இருக்காது என்று கூறி தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரத்து செய்தார்.
விரைவில் வர உள்ள மக்களவைத் தேர்தலுக்காக, காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி, 4 நாட்கள் பயணமாக உ.பி. சென்றுள்ளார்.
லக்னோ, பருக்காபாத், இட்டாவா ஆகிய பகுதிகளில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியினரை நேற்று சந்தித்துப் பேசினார். பொதுச்செயலாளராக பதவி ஏற்றபின் முதல் முறையாகப் பத்திரிகையாளர் சந்திப்பை நேற்று மாலையில் நடத்தப் பிரியங்கா காந்தி திட்டமிட்டு அழைப்பும் விடுத்திருந்தார்.
இந்தச் சூழலில், ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 45 வீரர்கள் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. இதையடுத்து, அரசியல் ரீதியாக ஊடகங்களிடம் கலந்துரையாடலை திடீரென ரத்து செய்தார் பிரியங்கா காந்தி.
ஊடகங்களிடம் பிரியங்கா காந்தி கூறுகையில், " புல்வாமாவில் நம்முடைய வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளபோது நான் இங்கு அரசியல் பேசுவது உகந்ததாக இருக்காது என உணர்கிறேன். தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஆதரவாக இருப்பார்கள் . அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும், அவர்களுக்குத் துணையாக தேசம் இருக்கும் பத்திரிகையாளர் கூட்டத்தை முடித்துக்கொள்கிறேன் " எனத் தெரிவித்தார்.
மேலும், தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்காக அந்தக் கூட்டத்தில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT