Last Updated : 03 Feb, 2019 01:43 PM

 

Published : 03 Feb 2019 01:43 PM
Last Updated : 03 Feb 2019 01:43 PM

எனக்கு ஏதாவது நேர்ந்தால் பிரதமர் மோடிதான் பொறுப்பு: அண்ணா ஹசாரே ஆவேசம்

எனக்கு ஏதாவது நேர்ந்தால் பிரதமர் மோடிதான் பொறுப்பு என்று காந்தியவாதியும், ஊழலுக்கு எதிரானவருமான அண்ணா ஹசாரே ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவேற்றவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், லோக்பால் நீதிபதி யாரும் நியமிக்கப்படவில்லை.

இதைக் கண்டித்தும், லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்கக் கோரியும், மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்கக்கோரியும் காந்தியவாதி அண்ணா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

அகமது நகர் மாவட்டத்தில் உள்ள தனது, கிராமமான ரலேகான் சித்தியில் கடந்த மாதம் 30-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 4-வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், அண்ணா ஹசாரே இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், " எந்தச் சூழலையும் சமாளிக்கும் திறமை உள்ளவன் என்று மக்களுக்கு என்னைத் தெரியும். அப்படித்தான் மக்கள் என்னை நினைவு கொள்கிறார்கள். எரிகின்ற தீயில் நெய்ஊற்றும் சிலரைப் போன்றுநான் கிடையாது.

நான் தொடங்கி இருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்குப் பிரதமர் மோடிதான் பொறுப்பு என்று மக்கள் அவரைப் பிடித்துக்கொள்வார்கள்.

லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும், லோக்பால் அமைப்புக்கு நீதிபதி நியமிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறேன். 2013-ம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டம் இயற்றியும் இன்னும் லோக்பால் அமைக்கப்படவில்லை.

லோக்பால் சட்டத்தில் யாரேனும் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தால், பிரதமரைக் கூட விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இதேபோல, லோக்ஆயுக்தாவிலும், முதல்வரையும், அவரின் அமைச்சர்களையும் கூட விசாரிக்க முடியும். ஆனால், அவர்கள் மீதான குற்றங்களுக்கு தகுந்த ஆதாரங்களை அளிக்க வேண்டும்

இந்த அம்சங்கள் காரணமாக எழுந்த அச்சத்தால் இதைக் கொண்டுவர அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர். எந்த கட்சிக்கும் லோக்பால், லோக் ஆயுக்தா நீதிபதிகளை நியமிக்க விருப்பம் இல்லை "

இவ்வாறு அண்ணா ஹசாரே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x