Last Updated : 26 Feb, 2019 09:38 AM

 

Published : 26 Feb 2019 09:38 AM
Last Updated : 26 Feb 2019 09:38 AM

உ.பி.யில் கைதான காஷ்மீர் தீவிரவாதிகளிடம் விசாரணை; மதரஸா மாணவரின் அறையில் இருந்தவர்கள் அரிய செயலியை பயன்படுத்தியது அம்பலம்

புல்வாமாவில் சிஆர்பிஎப் படையினர் மீதான தாக்குதலை தொடர்ந்து பிப்ரவரி 21-ல் உ.பி.யின்தியோபந்தில் 2 காஷ்மீர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சஹாரன்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் தமிழருமான பி.தினேஷ்குமார் கூறும்போது, ‘பழம்பெருமை வாய்ந்த தாரூல் உலூமை போல் நூற்றுக்கணக்கான மதரஸாக்கள் தியோபந்தில் உள்ளன. அதில் ஒரு மதரஸாவில் பயிலும் காஷ்மீர் மாணவரின் அறையில் விருந்தினராக இருவரும் தங்கி இருந்தனர். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை கைது செய்ய வந்த ஏடிஎஸ் படைக்கு நாங்கள் உதவியாக இருந்தோம். மதரஸாவில் சேர்வதற்காக என இருவரும் காஷ்மீரில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக இங்கு வருவதும், செல்வதும் என இருந்துள்ளனர்’ என்றார்.

கடந்த வியாழக்கிழமை இரவு உ.பி.யின் தியோபந்தில் உள்ள ஒரு தனியார் மாணவர் விடுதியில் ஏடிஎஸ் அதிரடிப்படையினர் திடீர் சோதனை நடத்தினர் இதில், புல்வாமா தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம்சாட்டி காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த ஷானவாஸ் துளி மற்றும் அதன் அருகிலுள்ள குல்காமைச் சேர்ந்த ஆகிப் அகமது மல்லீக் என இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த இருவருக்கும் புல்வாமா தாக்குதலை பற்றிய தகவல் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக ஏடிஎஸ் கூறியுள்ளது. இவர்களது தொலைபேசி உரையாடல்களை உளவு பார்த்த ஏடிஎஸ் படைக்கு இருவருக்கும் ஜெய்ஷ்-எ-முகமது தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மறுநாள், லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் 10 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். இவர்களிடம் ஏடிஎஸ் படையினர் நடத்திவரும் விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து ஏடிஎஸ் படையின் ஐஜியான அசீம் அருண் கூறும்போது, ‘தியோபந்தில் உள்ள மதரஸாக்களின் மாணவர்கள் இடையே தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்க்க்க இருவரும் முயன்றுள்ளனர். பிளே ஸ்டோரிலும் இல்லாத ஒரு அரிய செயலி மூலம் இருவரும் தங்கள் குரல்களை பதிவு செய்து தீவிரவாத அமைப்பின் தொடர்பில் இருந்துள்ளனர். டெலிட் செய்யப்பட்ட அவற்றுடன் சில முக்கிய வீடியோக்களையும் மீட்டெடுக்கும் முயற்சியை செய்து வருகிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x