Published : 16 Feb 2019 03:00 PM
Last Updated : 16 Feb 2019 03:00 PM

மீண்டும் துல்லிய தாக்குதல்? - தீவிரவாதிகளை அழிக்க மத்திய அரசுக்கு அனைத்துக்கட்சிகள் ஆதரவு

புல்வாமா தாக்குதல் குறித்து விவாதிப்பதற்காக  அனைத்துக்கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளும் உறுதியளித்தன.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.  இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. நிதியமைச்சர்   அருண்ஜேட்லி, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அதிமுக, திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் தொடர்பான விவரங்களை ராஜ்நாத் சிங் எடுத்துக் கூறினார். அனைத்து கட்சி தலைவர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அனைத்துக் கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். அதுபோலவே வர்த்தகம் செய்வதில் இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற அந்தஸ்தும் பாகிஸ்தானுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சர்வதேச நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக நெருக்கடி அளிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.  

கடந்த 2016 செப்டம்பரில் காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக செப்டம்பர் 28-ம் தேதி காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் நுழைந்து ஏராளமான தீவிரவாத முகாம்களை அழித்தனர்.

தற்போதும் அதேபோல பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி கூறியபடி நேரடியாக ராணுவம் தாக்குதல் நடத்தும் வகையில் நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x