Published : 01 Feb 2019 04:53 PM
Last Updated : 01 Feb 2019 04:53 PM
ஆணவக் கொலையால் காதல் கணவன் பிரனய் குமாரை இழந்த அம்ருதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
பிரனய் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் அவரின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்த அம்ருதா கர்ப்பமானார். இதனால் மிகுந்த கோபமடைந்த மாருதி ராவ், பிரனய் குமாரை கொல்லத் திட்டமிட்டார். மருத்துவப் பரிசோதனைக்காக இருவரும் மருத்துவமனைக்குச் சென்றபோது அவர் ஏவிவிட்ட கூலிப்படை, பிரனய் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் அவர் உயிரிழந்தார்.
கர்ப்பத்தைக் கலைக்குமாறு கூறி தந்தை மிரட்டியதாக மகள் அம்ருதா போலீஸில் வாக்குமூலம் அளித்தார். நாட்டையே உலுக்கிய இந்த ஆணவக் கொலையில் தொடர்புடைய கூலிப்படையையும் அம்ருதாவின் தந்தையையும் போலீஸார் கைது செய்தனர்.
பிரனய்க்கு நீதி கேட்டு ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஆணவக் கொலையை எதிர்த்துத் தொடர்ந்து போராடுவேன் என்று அம்ருதா தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் கழித்து தற்போது அம்ருதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்ருதா, ''பிரனய் உனது ஆன்மா தூய்மையானது. உன்னுடைய காதல் விலைமதிப்பில்லாதது; உன் அறிவு வியப்பை அளிப்பது'' என்று தெரிவித்துள்ளார்.
புகைப்படத்தில், தன்னுடைய மகனை ஏந்தித் தனது காதல் கணவனின் புகைப்படத்தின் முன்பு நிற்கிறார் அம்ருதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT