Published : 28 Feb 2019 08:48 AM
Last Updated : 28 Feb 2019 08:48 AM
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு சரணாலயம் உள்ளது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கல் அதிகம் இருந்த நிலையில் 22-ம் தேதி திடீரென தீப்பிடித்தது. காய்ந்த சருகுகள், புற்களினால் தீ வேகமாக பரவியதால் மரம், செடி, கொடிகள் தீப்பிடித்து எரிந்தன.
வனப்பகுதி தீப்பற்றி எரிந்ததால் வனப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களும், சாலைகளும் புகை மண்டலமாக மாறியதால் பந்திப்பூர் சாலை மூடப்பட்டது. இதையடுத்து வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்கும் பணியில் இறங்கினர். 4 ராணுவ ஹெலிகாப்டர்களின் உதவியுடன் கடந்த இரு தினங்களாக தீயணைப்பு பணி நடைபெற்றது.
இதனால் 5 நாட்களுக்கு பிறகு தீ நேற்று முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதுகுறித்து கர்நாடக வனத்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறுகையில், ‘‘15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் இருந்த மரம், செடி, கொடி உள்ளிட்ட தாவரங்கள் 80 சதவீதம் எரிந்து சாம்பலாகிவிட்டது. நூற்றுக்கணக்கான வனவிலங்குகளும் தீயில் கருகிவிட்டன. சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்டு வந்த சபாரி மார்ச் 3-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT