Last Updated : 07 Feb, 2019 08:03 AM

 

Published : 07 Feb 2019 08:03 AM
Last Updated : 07 Feb 2019 08:03 AM

கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி: ஆளுநர் உரை பாதியில் நின்றதால் பரபரப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு எதிராக‌ பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் வஜூபாய் வாலா தனது உரையை பாதியில் நிறுத்திவிட்டு, அவையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் தொடங்கியது. காலையில் ஆளுநர் வஜூபாய் வாலா தனது உரையை தொடங்கியதும், அவையில் இருந்த பாஜக எம்எல்ஏக்கள் எழுந்து கோஷமிட்டனர்.

மேலும், அவையின் மைய பகுதிக்கு வந்த பாஜக எம்எல்ஏக்கள் 104 பேரும், காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அரசுக்கு போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை என்றும், எனவே, அரசை கலைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த அமளி காரணமாக அதிருப்தி அடைந்த ஆளுநர் வஜூபாய் வாலா, தனது உரையை பாதியிலே நிறுத்திவிட்டு, அவையை விட்டு வெளியேறினார்.

இதனிடையே, பாஜகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை முற்றிலுமாக முடங்கியது.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரம் கூறுகையில், ''பட்ஜெட்டை தாக்கல் செய்ய விடாமல் அவையை முடக்க பாஜக முயற்சித்து வருகிறது. இதனால், கர்நாடக அரசுக்கு போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என காரணம் காட்டி, ஆட்சியை கலைக்க கோரவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது'' என அவர்கள் தெரிவித்தன‌ர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x