Last Updated : 11 Feb, 2019 08:59 AM

 

Published : 11 Feb 2019 08:59 AM
Last Updated : 11 Feb 2019 08:59 AM

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து: டெல்லியில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, மாநில முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு டெல்லியில் உள்ள ஆந்திரா பவனில் இன்று "தர்ம போரட்ட தீக் ஷா"  எனும் பெயரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்து இருந்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்பதால், பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகினார். கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களையும், எதிர்ப்பையும் சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காலை 8 மணிக்கு ஆந்திரா பவனில் "தர்ம போரட்ட தீக் ஷா" என்ற பெயரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இந்தப் போராட்டம் இன்று இரவு 8 மணிவரை நடக்கிறது.

முன்னதாக, டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு மலர்தூவி மரரியாதை செலுத்தினார். அதன்பின் ஆந்திரா பவனில் உள்ள  டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் ஆந்திரா பவனில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கினார்.

இந்த போராட்டத்தில் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், பங்கேற்றுள்ளனர்.

மேலும், எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து ஏராளமான தலைவர்கள் வந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்கள், சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தபின் நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, சந்திரபாபு நாயுடு மனு அளிக்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x