Published : 12 Feb 2019 03:30 PM
Last Updated : 12 Feb 2019 03:30 PM

கடந்த 4 வருடங்களில் இந்தியாவில் 60% பெண் குழந்தைகள் தத்தெடுப்பு

கடந்த 4 வருடங்களில் மட்டும் இந்தியாவில் 60% பெண் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட  புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் புள்ளி விவரத்தில் இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரை 11,649 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 6,962 ஆகவும், ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 4,687 ஆகவும் உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளையே அதிகம் பேர் விரும்பி தத்தெடுக்கின்றனர். இதை சதவீதத்தில் எடுத்துக்கொண்டால் 100க்கு 60% பெண் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு நல ஆணையத்தின் (Central Adoption Resource Authority) குழுவில் இடம்பெற்றுள்ள பிரஜக்தா குல்கரனி கூறும்போது, ''இந்தப் புள்ளி விவரத்தின் மூலம் நாடு முழுவதும் நிலவிய பாலினப் பாகுபாடு மற்றும்  பெண் குழந்தைகளுக்கு எதிரான நிலைப்பாடு மாறியுள்ளது என்பது எதிரொலிக்கப்படுகிறது. இதனை ஆய்வுக்குட்படுத்தி பார்க்க வேண்டும்'' என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநிலக் குழந்தைகள் தத்தெடுப்பு கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் சிந்து நாயக் கூறும்போது, ''நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தரக் குடும்பங்கள் பெண் குழந்தைகளின் நிலையை அதிகம் புரிந்து வைத்துள்ளனர். இவர்கள் பெண் குழந்தைகளை அதிகம் தத்தெடுக்கின்றனர். ஆனால் இந்த நிலைப்பாடு கிராமம் மற்றும் சிறு நகரங்களில் வேறுபடுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x