Published : 09 Feb 2019 04:51 PM
Last Updated : 09 Feb 2019 04:51 PM
யானை சிலைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை வைத்து பாஜகவினர் அவதூறு பிரசாரம் செய்வதாக மாயாவதி விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருந்தபோது மாயாவதி அம்மாநிலத்தில் லக்னோ மற்றும் நொய்டா நகரங்களில் யானை சிலைகளை நிறுவினார். இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. யானை சிலைதான் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் என்பதால் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ரவி காந்த் என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், பொதுமக்களின் ரூ.2000 கோடி வரை பணத்தை செலவழித்து உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருந்த மாயாவதி யானை சிலைகளையும், தனது சிலைகளையும் நிறுவியிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கானா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ரஞ்சன் கோகோய், இந்த வழக்கைப் பொருத்தவரை இப்போதைக்கு எங்களுக்கு ஒரு பார்வை இருக்கிறது. பொதுமக்கள் வரிப்பணத்தை செலவழித்து தனது சிலைகளையும் தனது கட்சியின் யானை சின்னத்தையும் வடித்து மாநிலம் முழுவதும் நிறுவிய மாயாவதி அரசு கருவூலத்தில் அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது" என்றார்.
இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் மாயாவதி தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பூங்காவில் அழகை அதிகரிக்கவும், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த தலைவர்கள், ஞாநிகள் கவுரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்தினோம். இதன் மூலம் உத்தர பிரதேச சுற்றுலாவை இது மேம்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச அரசுக்கு தொடர்ந்து வருவாயும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது பார்வையை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆனால் பாஜகவினரும், ஊடகங்களும் அவதூறு கிளப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT